Monday, October 23, 2017

மீண்டு(ம்) வருமா?

 
தோட்டத்தில் புதைக்க /
ஆட்டமாடி விழுந்திட்ட/

பால் பல்லை/ 
வான் அறியாது/

மறைத்த நொடிகள் /
மீண்டு(ம்) வருமா????



Wednesday, July 26, 2017

எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

புத்திரபாக்கியம் பெற்றிடவே
புத்திரகாமேஷ்டியாகம் செய்த பெற்றோருக்கு
புத்திரனாய் வந்துதித்த நீ காடேகு என்னும் சொல்லை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

இன்னல்கள் மிகுந்த காட்டில் உறையும் போதும்
மான் வேண்டுமென்ற மனைவியின் ஆவலை
காதல் வரமென்றே மனதில்
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

பத்தினியவளை பாவியவன் கடத்திவிட்டான்
பாதணிகளின்றி  முட்கள் நிறைந்த காட்டில் துணையை  தேடி திரிகையிலும்
தினவெடுத்த தோள்களில் வில்லை  சுமையாக  எண்ணாமல்
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

கடமைகளை ஆற்றிட சொல்லொணா  துயருடன் கடலை கடக்கையிலே
நின்னையும் இளவலையும் இலகுவாக சுமக்கும் அனுமனின்
ஈடில்லா பக்தியதன் சக்தியை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

மாற்றான் மணை நோக்கியவனின் நீங்காத ஆசைகளை
அம்புகளால் துளைத்து களைந்த நீ
அவன் இலவளின் தூய பக்தியை  ஏற்று
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

கல்லான அகலிகைக்கு சாபமதை நீக்கி பின் நின் மனைவியின்
கற்பை  உலகிற்கு உணர்த்திட தீக்குளி எனும் வேளையிலே
கல்லாய்  கனத்த  உன் நெஞ்சின் பாரத்தை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

பெண்களுக்கு பெருமதிப்பை பெற்று தந்த
பெண்தெய்வத்துடன்  அரியாசனத்தில் அமர்கயிலே
போற்றி வணங்கிய உயிர்களின் அன்பை
எப்படித்தான் சுமந்தாயோ ராமா?

Thursday, July 20, 2017

போராட்டமே வாழ்க்கை

முட்டையிலிருக்கும் கோழிக்குஞ்சு
முட்டி மோதினால் மட்டுமே வெளியுலக வாழ்வு பெறும்

கூட்டிலுறங்கும் புழுகூட வண்ணத்து பூச்சியாகிட
கட்டிப்போட்ட தளைகளை தகர்க்கும்

தெய்வச்சிலைகளின் கருணைபொங்கும் கண்கள்
செதுக்கிய உளியின் வலியை உணரும்

தேரோட்டத்தில் திசைமாற்றவே முட்டுக்கட்டை தேவை
போராட்டமே என்றும்  முன்னேற்றும் வாழ்வை

Wednesday, June 14, 2017

சீதையின் சுயம்வரம்

கட்டுத்தறியையும் கவிசொல்ல வைக்கும்
கவிச்சக்ரவர்த்தியின் மனம்கவர் கதாநாயகனவன்!

தந்தைசொல் மிக்க மந்திரமில்லை  என உலகத்தோர்
சிந்தையில் செதுக்கிய   தவப்புதல்வன்!

பெண்மையை போற்றுகின்ற
பேராண்மை படைத்தவன்!

கற்புநிலையை பொதுவில் வைத்து
ஒருவனுக்கு ஒருத்தியென்றான்!

பத்துதலை இராவணனை நிராயுதபாணியாக்கி
பித்துக்கொள்ள வைத்திட்டான்  மாறாக

இரக்கமில்லா  தாடகையை  பெண்ணென்பதால்  மனதில்
கலக்கம்  மிகக் கொண்டே வதைத்திட்டான்!

அகலா பெருந்துயருடன்  கல்லாகியிருந்த
அகலிகையின் சாபத்தை போக்கியவன்!

சுயம்வரத்தில்  வில்முறித்து தன் வீரத்தை
நயம்பட உரைத்து நின்றான்!

கன்னியவள் நெஞ்சினிலே
எண்ணியபடி இடம்பிடித்தான்!

தாரைவார்க்கு முன்  அறிமுகமான   அயோத்தி இராமன் 
தாரத்திற்கு    உணர வைத்தான்  இராமனிருக்கும்   இடமே அயோத்தியென!

Saturday, May 6, 2017

தேநீர் விருந்து

இளங்காலை பொழுதென்றால் 
இளங்காளை எழுகின்றேன் 
இன்முகத்து அருந்தாயின் 
உபசாரம் மனமீதில்!


Wednesday, May 3, 2017

பரிதவித்தாய்


பசித்த சிசுவின் 
தவிப்பு அறிந்தாள் 
உடைத்த  கல்லும் 
கூறிற்று வலியை 

Tuesday, May 2, 2017

கண்ணே கண்மணியே....

அறியாமையை  அணிந்துகொண்டு
என் வயிற்றில் வந்துதித்த  அற்புதமே!

மழலை மொழி கேட்டு  மகிழ்கின்றேன்
தாயெனும் தகுதிக்கு உயர்கின்றேன்!

ஏழைத்தாய் என்னையும்  முத்தமிட்டு
இறுமாப்புக்கொள்ள வைக்கின்றாய்!

இமயத்தை கூட தலையில் சுமந்திடுவேன் 
இன்னலின்றே நீ வளர்ந்திடவே!

Thursday, April 27, 2017

மீண்டும் என் குழந்தை பருவம் வேண்டும்


மட்டைப்பந்து விளையாடிய  அண்ணனை 
கைதட்டி கவாஸ்கர் என்றே முழங்கியதும் 

பூவரச மரத்தின் நிழலில் இலை பறித்து 
பீப்பீ செய்து வாசித்த கச்சேரிக்கு   
தவிலாக வாளியை தட்டிய தம்பியும் என 
தித்திக்கும் நினைவுகள் திரும்ப கிடைத்திடவே 

வேண்டும் ஒரு வரம் எனக்கு 
மீண்டும் என் பருவம் பால்யமாகிடவே!

Wednesday, April 26, 2017

இரண்டுவரி கவிதைகள்


வீரம்

நித்தமும்  பலர் பலியானாலும் வெளியுலகில்
ஆயுதமின்றி பயணிக்கும் பெண்களின் துணிவு!

சிரிப்பு

பல்லாயிரம் உயிரனங்கள் வாழ்ந்தாலும்
மனிதனுக்கு  மட்டுமே கிடைத்த வரம்!

மனம்

மகிழ்ச்சியில்  நூறுகாதம் தாண்டியும்  குதிக்கும்
சோகத்தில் ஆறுதலை  வேண்டியும்  நிற்கும்

அமைதி

மிருக மனம்  அமைதியானால் மனிதனாகும்  நல்
மனித மனம் அமைதியானால் தெய்வமாகும்!


ஆலிலை கண்ணா!


பிரஹலாதன்  சிறுபாலகனென்றாலும் நின்
திருவடி பணிந்துவிட்டதால்

ஓடி நீயும் ஒளிந்துகொண்டாய் அவனை காத்திடவே
தேடி தேடி சிறு துரும்பு முதல் தூண்வரையிலும்!  கோதை

சூடிய மலர்களை வாங்கி
சூடிக்கொண்டு மகிழ்ந்தாய்!

நின்னடியார்களுக்கு என்றும் நீ அடிமையோ  அவர்கள்
சொன்னவண்ணம் செய்யும் திருமாலே?

நின்மேனி பச்சைமாமலையென்றார்
நீரேந்தும்  மேகநிறமென்றார்!

உன்னடியார்களின் பாமாலைகள்
உன் திருவடியின்  மகிமையை  மனதில் பதிக்குதே!

மகிழ்ச்சியில்  பொங்கும் கண்ணீர்
அடுப்பில்  பொங்கும்  பாலை மறைக்குதே!

ஊசலாடும் மனதுடன்
ஊணுடம்பு  வளர்க்கிறேன்!

கடலிலே விழுந்திட்ட சிறு துரும்பானேன்
கடக்கின்றேன் நீ அளித்த வாழ்வதனை!

பேரலைகள்   நீ ஏன் செய்கின்றாய் கண்ணா
சிறு துரும்பிடமுமா உன் குறும்பு?

அலையோசையோடே என் மனம் உன்
குழலோசையை  நாடுதே!

அலையோயும் அச்சிறு கணத்திலே
அழைக்கின்றேன் நான்  உன்னை!

கடமைகளால் என்னை  கட்டிப்போட்டு   இவ்வுலக
உடைமைகளில் என் மனதை நீ திசைதிருப்பினாலும்...

பாம்பணை போல நீ படுத்துறங்க முடியாவிட்டாலும்
ஆலிலை போல் அழகான ஓரிடம்

உனக்காக   என்னுள்ளத்தில் என்றுமே
உள்ளது  கண்ணா!

Tuesday, April 25, 2017

காதல் கள்வன்

நலமாய் நாம்  வாழ
உளமாற நீ நினைக்கின்றாய்!

கவனமுடன் கல்லூரியில் நான் படித்திடவே என்
கண்ணில் பட்டுவிடாது ஒளிந்து ஓடுகின்றாய்!

இலட்சியங்கள் வென்றுவிட்டு பின்
இல்வாழ்க்கை தொடங்கிடவே துடிக்கின்றாய்!

திண்ணமான மனதோடு நீயும் உன்
எண்ணங்களை வெல்கின்றாய்!

பெருமையோடு உனை கொண்டாடிட
பேதை நானும் விழையும் வேளையிலே...

பெரிய கள்வன் நீயென்று உணர்த்துகின்றாய்   நித்தம்
ஏமாற்றி என்னை அணைக்கின்றாய் நள்ளிரவில் வரும் கனவில்!



அம்புப் படுக்கை!


பாலும் தேனும் தினம் விருந்தாக
நானுமுன்னை வேண்டவில்லை!

பஞ்சுமெத்தை தேவையில்லை நடுசாமத்தில்
கொஞ்சும் சிசுவும்  தொல்லையில்லை!

உழைத்து துவண்டிட்ட   உடம்பென்றும் 
பிழைத்து வாழ்ந்திட தேவை நல்லுறக்கம்!

அன்பு வார்த்தைகளுக்கும் உன்னிடம்   பஞ்சமென்றாலும்  
என் மனதை  கடும் சொல்லம்புகள் படுக்கும் மஞ்சமாக்கிடாதே!


Friday, April 21, 2017

நான்கு வரிக்கவிதை

அல்லிமலரும் , சந்திரனும்..
------------------------------------------
வெள்ளை உளத்தாலே
விண்ணை அடைந்தாயே
உண்ண  அழைத்தேனே
அல்லிமலர்   தேனே!

Thursday, April 20, 2017

இருவரி கவிதைகள் - 3



கண்ணீர்

இன்ப துன்பங்கள் மனதில் எல்லைதாண்டிவிட்ட
தருணத்தின் அடையாளம்!

தவிப்பு

சிந்தனைகளின்  வேகத்திற்கு ஈடுகொடுத்து
செயல்பட முடியாத நிலையில் தோன்றுவது!

யாசகம்

கழிவிரக்கம் தன்மேல் ஏற்பட வைத்து
தம் தேவைகளை நிறைவேற்ற முயல்வது!


போராட்டம்

 நிராகரிக்கப்பட்ட தேவைகளை அடைய
 வீரத்துடன் நேரிடையாக முயல்வது.

Tuesday, April 18, 2017

மாயனே,,, தாமோதரா,,,,,

விந்தைகள் செய்ய வந்தாய்  பல
சிந்தைகள்  கவர விழைந்தாய்!

சுற்றிலும் பெரிய மதில் சூழ் அறை உலகையே 
சுட்டுவிடும் ஆதவனுக்கா  சிறை?

சங்கொடு சக்கரமும் மின்ன மாயனே
அங்கொரு பிறப்புதான் என்ன?

கார்மேகமுன்  வண்ணம் கண்டதும்-மயங்கியதோ
கயிலைநாதரின் எண்ணம் அதனால்தான்

ஆலகாலத்தை உண்டு அர்த்தநாரியும்
நீலகண்டனாய் உருமாறி  மகிழ்ந்தனரோ?

பைந்நாகப்பாயில் உன் படுக்கை நன்கு
பள்ளிகொண்டபின்னும் ஏன்  வேடிக்கை?

ஆலிலையிலும்  துயில இன்னுமோர் ஆராய்ச்சி
அல்லல்பட்டிருப்பாள் உன்னால்  யசோதை ஆய்ச்சி

வெண்ணெயுண்ட பாலகன் நீ
மண்ணையுமுண்டு ருசித்தவன்

இளகிய மனதொடு  பிரளயத்தில் காத்திடவே
உலகையே உண்ணும் பெருவாயா

உலகம் உண்ட உன் பெருவாயை
வியந்து  நோக்கிவிட்ட  நல்தாயின்  மனதை

கர்வம் பீடிக்கவிடாமல் எந்த மாய
கயிறுகொண்டு கட்டினயோ  தாமோதரா?

Sunday, April 16, 2017

திராவிட வேதம் தந்த பெருமான்!!

திரவியமான திராவிட வேதம்
திக்கெட்டும் வணங்கி போற்றும்
திவ்ய பிரபந்தமதில் என்றும்
திளைத்திருக்கும் திருமாலே!

செந்தமிழில்   பாசுரங்கள்
செய்துவைத்த ஆழ்வார்கள்
செப்பிய கோயில்களில்
செல்வாக்குடன் உறைகின்றாய்!

நம்மாழ்வார் மனதிலே
நலமாய் அமர்ந்துகொண்டு
நான்குவேதங்களையும்
நற்றமிழில் உரைத்துவிட்டாய்!

குருகூர் நம்பி  மாறன் புகழ்
குறையிலாது வளர்ந்திடவே
கோரிக்கை வைத்தாய்
கவிச்சக்கரவர்த்தி கம்பரிடம்!

பராங்குசன் காரிமாறனை
பாரெங்கும் பரிச்சயமாக்கிடவே
படைத்தார் கம்பர் அந்தாதியும்
பெருமைமிகு சடகோபருக்கு!

மதுரகவியாழ்வார் மகிழ்ந்து
மனமுவந்தருளிய  பாமாலைகள்  தம்
மனம்கவர் குருநாதர்
மாறனுக்கு மட்டுமே!

ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்...

Tuesday, March 14, 2017

இருவரிக் கவிதைகள் - 2


மண்

உயிரிகளின் உறைவிடம்
உயிரற்றவைக்கும் புகலிடம்!


வண்ணம்

காட்சிகளுக்கு உயிர்ப்பளித்து
கண்களுக்கு விருந்தாக்கும்!


விதி

கணக்கு போட்டு பழகிய மனம்
எதிர்பாராத செயலை ஏற்க சொல்லும் காரணம்!


அடக்கம்

மனதில் எண்ணங்கள் மிக உயர்வாகவும்
எளிய வாழ்க்கையும் கொண்ட உயர் மனிதர்கள்!


Thursday, March 9, 2017

கருவறை உறக்கம்!

கவிந்த இருளில் காட்சிகளில்லா கண்களுடன்
முன்ஜென்ம நினைவுகள் முள்படுக்கையாக்கிட..

திரும்பிக்கூட படுக்க முடியாத
தொல்லையான தூக்கமது!

உடலை "ங" போல் வளைத்திருக்கும்
வேதனையான பயிற்சியது!

தன்னை சுமக்கும் தாய்போல் கருவறை  சிசுவும் கூட
தன்னுறக்கம் இழக்குமோ?

ஒற்றைக்குரல்!

தனிமரம் தோப்பாகிய விந்தை இது
தனிமையில் குரலெழுப்பிய சிந்தை அது!

தலைவனின் ஒற்றைக்குரலின் ஓசை
தலைவிக்கு சங்கேத பாஷை!

சிசுவின் ஒரு சிறுசினுங்கல் அதன்
பசியாற்றிடும்  நடு சாமத்திலும்!

மௌனத்தின் ராகம் அதனை புரிந்த
மனதை  நாடிப்  போகும்!

தவறவிட்ட தருணங்கள்....


பாசத்தை கண்களில் தோய்த்து 
புன்னகைக்கையில்....
புதைந்துதான் போகிறேன் 
அவளன்பில் நான்!

வீட்டை நான் நெருங்கும் முன்னே 
வேகமாக ஓடிடும் என் மனம் அவளைத்தேடி!

பள்ளிப்படிப்பை முடிக்காதவன் நான் 
பாரதியாய் என்னை எண்ணி 

உவகை கொள்வேன் அவள் 
உச்சியை முகர்ந்து விட்டு!

வானிலை போல் இப்போதெல்லாம் 
வறட்டி எடுக்கிறாள் என் மகள் 

எரிச்சலும் கோபமும் 
எங்கிருந்து வந்ததோ?

பதின் பருவம் என் செல்வத்தை 
பாடாய்படுத்துவதை தடுக்க இயலாமல் 

மாற்றிக்கொள்கிறேன் என் முன்கோப குணத்தை 
மகளின் துன்பம் குறைக்க!

பெருமையும் கொள்கிறேன் நானொரு 
பொறுப்பான தந்தையென்று...ஆனால் 

மனைவியின் உடல்மாற்றங்களை உணராது அவள் 
மனதை நோகடித்த தருணங்களை எண்ணுகையில் 

வெட்கித்தலை குனிகிறேன் - நேற்றுவரை 
வேங்கையென்றிண்ணியிருந்ததற்காக!

முதல் சாதனை!

தாயின் கருவில் தனியே உதித்திருந்து..
தந்தையின் குரலை கேட்டு ரசித்திருந்து..

தொப்புள் கொடி வழியே 
தப்பாமல் தன் பசி தானாய் தீர்ந்துவிட..

முழுவளர்ச்சியடைந்து  பெற்ற  விடுதலையால் 
வயிற்றுப்பசி உயிரை வதைக்க முதன்முதலாய் 

வாய் வழியே பால் உண்டு தன்னுயிர் காத்ததே   
வாழ்வின் முதல் சாதனையாகுமே !

மகுடி மனசு!

போதை மருந்து  அடைக்கலம் கொடுத்த
உடலை  அடிமையாக்கும் !

மீண்டு வருவதற்குள் 
வீணாகும் பொன்னான வாழ்நாட்களும்!

புகழ் போதைக்கு மனதில் 
புகலிடம் தந்துவிட்டாலோ...

போற்றுவோர் வசம் பொத்தென விழும் என்றும் 
தூற்றுவோர்க்கு நல் செய்தியாகும்  மகுடி மனசால்!

Wednesday, March 8, 2017

மகளே மங்கா புகழே!


பிஞ்சுக்கரம் பிடித்து மகளை
பள்ளிக்கூடம் கொண்டு சேர்த்தேன்!

அறிவியலும் அன்பும் இணைந்த புது
அவதாரம் எடுத்துவிட்டாள்!

அரவணைப்புடன் அந்நிய தேசத்தையும்  எனக்கு
அறிமுகம் செய்துவைக்கிறாள்!

தவமிருந்த தகப்பன் நான் பெற்றுவிட்டேன்
தாயையே மீண்டும் மகளாக!

Tuesday, March 7, 2017

செந்தமிழ்ச் சாரலில் செய்த கூடு!

செந்தமிழ்ச் சாரலில் செய்த கூடு!
பைந்தமிழ் உரிமையாய் உறையும் வீடு!

மணமணக்கும் சமையலறை நாவிற்கு விருந்தாய்!
கலகலக்கும் நகைச்சுவையோ மனதிற்கு மருந்தாய்!

உலகாளும் தமிழை வளர்க்க
ஒவ்வொரு நாளும் சான்றிதழ் மழை!

தெய்வப்  புலவரை வணங்கி
தினம் ஒரு குறளால் துதிக்கலாம்!

அவ்வையின் பாதம் பணிந்து
அமுத மொழிகள் அறியலாம்!

ஒரே சொல் மந்திரம் போல்
ஓங்கி ஒலிக்கிறது ஒரே சான்றிதழில்!

தினமும் சுவைக்க
திகட்டாத குறும்பா!

ஆழ்ந்த அர்த்தங்களுடன்
ஆன்மீகப்  பதிவுகள்!

வாரத்திற்கு ஒரு விருந்தாளியாய்
வாரக் கவிதைகளும் உண்டு!

சிறந்த கவிஞர்களின் ஆசியுடன்
சீர்மிகு நேர்காணல்!

தமிழைப்  பிழையின்றி கற்க
தாய் போன்ற அரவணைப்புடன் அறிவோம் தமிழ்!

கவிஞர்களுக்கு கொண்டாட்டம் தான்
காலை முதல் இரவு வரை!

இரகசியம்

நிறைவேறாத ஆசைகள் மனதில்
நிறைந்திருந்த காலத்தில்

எதிர்பார்ப்புகளையே  இலக்குகளாக்கி  உழைத்து
எட்டிவிட்ட உயரங்களை எண்ணிப்  பூரிப்படைந்துகொண்டிருக்கையிலே

மூடியிருந்த மனதின் இரகசிய பெட்டகங்களைத்  திறக்கும்
மந்திரக்கோலாய் விளங்குகின்றது

என்னால் நிராகரிக்கப்படுகின்ற என் வாரிசுகளின்
எல்லையில்லா எதிர்பார்ப்புகள்!

விழித்திடு நீ பிழைத்திடு

இலக்கு அதுவே உன் நோக்கமாக இருக்கட்டும்
விலக்கு இடையே வரும் சலசலப்புக்களை

காத்திரு கொக்குபோல் உருமீன் வரும்வரை  
கனிந்திடும் காலமும் நம்பிக்கையை வளர்த்திடு

விழித்திடு நீ பிழைத்திடு நல்வழியில்
வளர்ந்திடு உன்  வம்சம் விதைத்திடு

காதல் ரோஜாவே!

கண்கட்டு வித்தையோ இது என் மனம்
தறிகெட்டு ஓடுதே அவள்  பின்னால்!

எனக்குப்  பின் பிறந்தவள் தான்  ஆனாலும்  
என்னை ஆட்டிப்  படைக்கின்றாள்! 

இரும்பு மனம் படைத்த என்னை
இருப்பு கொள்ளாமல் தவிக்க வைக்கின்றாள்!

உண்மையறியாமல் எதையுமே ஏற்காத  என்
தனித்தன்மை இழந்து நிற்கின்றேன்!

என் மனதை நானுரைக்க
என்னவளை நாடினால்...

கட்டிளங்காளை என்னை மௌனத்தால்
கட்டிப்போட்டு ஓடுகிறாள்!

ஆராய்ச்சிக்கல்வியில்  மூழ்கி
ஆராய்ந்து படித்துப்  பெற்ற..

பட்டங்கள் என் பெயருக்கு பின்னால் நின்று
திட்டங்கள் போட்டு எனை கேலி பேசுதே!

நங்கையவள் மனம் படிக்க  ஒரு
பல்கலைகழகமும்  உள்ளதோ?

இதயம் என்ன விலை?

அறியாத வயதில் மணமுடித்து
ஆறேழு பிள்ளைகள் பெற்று புகுந்த வீட்டை

ஆயுள் முழுக்க அனுசரித்து
அற்புதமான உறவுகளை உருவாக்கி பிள்ளைகளின்

உடலைப்பேணி வளர்த்து பத்தாதென்று
இரண்டு மூன்று தலைமுறைக்கு உழைத்தின்று

படுக்கையிலேயே   பாசப்  பார்வை வீசும் தாயே  செல்ல
தலைப்பிள்ளைக்கு சொல்வாயா  உன்  இதயத்தின் விலையை?

நீதிக்கு முன்னால்!

நீதிக்கு முன்னால் அனைவரும் சமமென்று
நீதியை முதலில் உலகிற்கு வகுத்துக் கொடுத்து  பின்

தவறு புரிந்தவன் தாம்  பெற்ற பிள்ளையே ஆயினும் தண்டிக்க 
தேர்க்காலில் மகனை இட்டு தாம் வகுத்த நீதிக்கு உயிர் கொடுத்த சோழன்!

தமிழன்னை பாதம் பணிந்து பெற்ற முத்தமிழை
சங்கம் வைத்து வளர்த்து

பாராளும் மன்னன் ஐயம் நீக்க
பாமாலைகள் கோர்த்து மகிழ்ந்து

பாட்டெழுதி தந்தது  வையகமே போற்றி வணங்கும்
பரம்பொருளே  என்றாலும் குற்றமென்று உரைத்து

தமிழின் தரத்திற்கு குறைவராது தடுக்க
தன்னுயிர் தந்து காக்க துணிந்த நக்கீரர்! மாண்புமிக்க

பெரியோர்கள்   துலாக்கோல் போலிருந்து காத்த நீதியை
பேணி நாமும் பாதுகாத்திடுவோம்!

நிலவில்லா மேகம்!

பொறுமையில் சிகரத்தையே எட்டிவிடும் தன்
பெருமையை  மறந்த பெண்மையே..

உற்சாக உலக ஓட்டத்திற்கு என்றுமே
அச்சாணி  நீயடி!

உன் தனிமை துயரம் நீண்டு
வானையும் தாக்கிவிட்டதோ?

கருமேகங்களில் நிலவும் மறைந்துகொண்டு  தன்
கனத்த இதயத்தை சொல்லுதோ ?



இருவரிக்கவிதைகள்


கனவு

ஆழ்மனதின் திருத்தப்பட்ட பதிப்பின் ஒளிபரப்பு
ஆயுளுக்கும் இலவசம் எரிபொருள் தேவையின்மையால்!


காதல்

முன்ஜென்ம பந்தங்களை மட்டும்
மீண்டும் தொடரவைக்கும் அதிசய மந்திரம்!


கிம்பளம்

துரிதகதியில் சாதிக்க நினைக்கும்
திறமையில்லாத மூடர்களின் ஆயுதம்!


கீழ்ச்செயல்

காமவெறி  பிடித்தும் நாட்டிலேயே உலவும்
கூண்டில் அடைக்கவேண்டிய காட்டுவிலங்குகள்!

முகமூடி

நரம்புகளும் எலும்புகளும் ரத்தமும்
நிறைந்த உடல் கொண்டது  உலகின்  உயிரனமே!

மேலுரையாய் தோலிருக்க போதுமென
மௌனமாய் ஏற்றதிந்த விலங்கினமே!

குளிர் வெயில் தாக்காமல் காக்க  நாளும் நமக்கு
குடைபோல் ஒரு உடைதேவைதான் ஆடைகள் என்றுமே! சிலருக்கோ

அகத்தின் அழகை  வெளிக்காட்டிவிடாமல் மறைக்க
அத்தியாவசிய தேவையாகிவிட்டதோ ஒரு முகமூடி?

குழப்பம்!

அளவில்லாத வெள்ளம் பாயும் நதி!
அதிலோடும் ஓடம் அந்தோகதி!

எண்ணங்கள் மனதில் சங்கமித்தால்
திண்ணமான முடிவுகள் முடங்கிடுமே!

பிறர்கூறும் புறங்கூறல்கள்  அதனை
புறக்கணித்து விடு பெண்ணே!

நம்பிக்கை எனும் திசைநோக்கி
வாழ்க்கை படகை செலுத்த  குழம்பியோடிடும்  குழப்பமும்!

சிறை!

சிறையில் சிக்கிவிட்ட
சிறுத்தையோ இவன்?

அன்னையின் அன்புச்சிறையோ அல்லது மனதை
ஆள்பவளின் காதல் சிறையோ?

தினவெடுத்த
தோள்வலிமை கொண்டவனோ?

உடைத்தெறிய உள்ளமின்றி
உரமேறிய தன்  கரங்களுக்குள்ளே

சிறைக்கம்பிகளை
சிறை  வைத்தவனோ?  மாறாக

சிறைக்கம்பிகளுக்கு 
கறை படிந்த கரங்களுடன் 
உரையாடுவதும் பிடித்த வாடிக்கைதான்

தவறிழைத்திருந்தால் தப்பாமல்
பிழையதனை  நீக்கி வீண் 
பழிதனை களைந்து 
வெளி வந்திடு நீ 
விடுதலையாகி!!

சிசுவே...

தாய்ப்பால் குடிக்கும் முன்
புட்டிப்பால் புகழறிந்து!

தாலாட்டு கேட்கும் முன்
குறுவட்டு கவி கேட்டு!

பாட்டி வைத்தியம் மறைந்து
ஆண்டிபயாடிக் துணை நிற்க!

அத்தை எனுமுன்
அதனுறவு அறவே இன்றி!

மாமனை காண
மறுஜென்மம் வாய்க்குமென நம்பி!

பிஞ்சுக்கரம் தொடும்
நஞ்சுக்கொண்ட மானிடனை சேர்ந்து
வலையில் சிக்கி
வகையறியாது  உழலும்...

சிசுவே... இனி
சிறந்த இடம் எதுவோ
சிறப்பாக நீ வளர?


Monday, February 20, 2017

வறுமையின் நிறம்!

வளமையில் வானவில்லின் வண்ணங்கள்
வகுத்தெடுக்கும் அளவுகோலாய் அவரவர் எண்ணங்கள்!

வேடங்கள் பூணுவது வேடிக்கை!
ஏற்றத்தாழ்வது  போற்றுவதும் இங்கே வாடிக்கை!

வறுமையின் நிறம் என்றுமே நிரந்தரம்!
வாழ்வில் உணரவைக்கும் உலகின் தராதரம்! 

பகுத்துண்டு வாழும் பண்பு!
பசியிலும் உண்டிங்கு அன்பு!

Monday, February 13, 2017

பூவே உனைக்கண்டு

பூவே உனைக்கண்டு நான்
பிரம்மித்து  நிற்கின்றேன்!

வானின் மேகங்கள்
வள்ளல்போல்  வந்து

மாரியதை பொழிந்திடவே
மண்ணும் குளிர்ந்து மணம் வீசியதே

சிறுவிதையும் துளிர்விட்டு
செடியாய் வளர்ந்து நின்றதே

கால்நடைகளின் பசிப்பிணியிலிருந்து தப்பிப்  பின்னும்
கால்மிதிபட்டு  அழிந்துவிடாமலும்  பிழைத்து

மொட்டேந்தி பிறகின்று நீயும்
மலர்ந்திட்டாய்

மகரந்த சேர்க்கைக்கு துணை செய்ய நீயே
மணம் வீசி அழைப்பிதழும் அனுப்பிட்டாய்

வண்ணத்துப்பூச்சியின் வருகைகண்ட  மகிழ்ச்சியில்  -நீ
வந்த பாதையின் கடினங்கள் மறந்தனயோ?

சேர்த்துவைத்த தேனையெல்லாம் மொத்தமாய்
சொரிந்துவிட்டாயே!

நில் கவனி கொல்!

உணவுக்காக அலைகின்றோம் உயிரைக்காக்க விழைகின்றோம்
வயிற்றுப் பசியை  துரத்திடவே   கடலும்  மலையும்  கடக்கின்றோம்

அதிகாலைச்  சூரியனை  எங்கள் உலகின்  விளக்காக்கி
அந்திச் சாயுமுன்னே  இரையைச்  சாய்த்திட  துடிக்கின்றோம்

வென்றுவிட்டால்  ஒருநாள் கழிந்தது எம் வாழ்வில்
இல்லையென்றாலோ எதிரியின் முன் வீழ்வோம் இரையாகி

உணவே பிரதானமானாலும் பிறந்த  இனத்தை  உண்பதில்லை சந்ததியை
உழைக்க மட்டுமே பழக்குகிறோம் எங்களிடம் என்றுமே சோம்பலில்லை

Sunday, February 12, 2017

சுடரே சுடரே சுடாதே

சுடரே சுடரே சுடாதே
சற்றும்  இருள் உனை வெல்ல விடாதே

சுடுவது மட்டுமோ உன் கடமை?  நல்
சூழலை எரிப்பதும்  அந்தோ மடமை

நாணயம் போல் இவ்வுலகில்
நன்மை தீமை இரண்டுமுண்டு

ஒளியை பெருக்கி நீ மகிழ்வாயே
உலகில் உன் பொறுப்பை நன்கு உணர்வாயே

மாசறு மனதில் இணைவாயே
கசடற கற்போன் அறிவில் சேர்வாயே

பெரியோர் வாக்கில் தவழ்வாயே
பொறுமையை  அணிந்தவருடன் இரண்டறக்கலப்பாயே

அன்புக்கு மட்டும் நீ அடி பணிந்துவிடு
அதனை எரித்து தடுப்பதென்பது அறியாமை

ஆணவத்தை  அடையாளம்  கண்டுபிடித்துவிடு
ஆணிவேர் வரை எரித்துவிடு

உழைப்புக்கென்றும் நீ துணைஇருப்பாய் போகட்டும்
வெட்டிப்பேச்சினை மட்டும்  நீ எரித்திடுவாய்

Friday, February 10, 2017

வெண்பா

புள்ளினம் பூவிதழ்ப் பூமகளைக்   கண்டதும்

துள்ளின பந்துபோல் தன்னினம் என்றன

மனதின் களிப்பில் மயங்கி -வியப்பில்

கனவில் மகிழும்  கண்டு!

Thursday, February 9, 2017

தூரதேசம்...


கண்ணை மயக்கும் இயற்கை அழகு
விண்ணை முட்டும் அடுக்கு மாடிகள்

விதிகளை மதிக்கும் வாகன ஓட்டிகள்
செடிகளை போற்றி பராமரிக்கும் மக்கள்

பெருமிதம் பொங்க தூரதேச
தெருவீதியில் நடந்தால் எதிரில்

வயதானோரை கண்டதும் மனதில்
வந்துவிடுகிறது பெற்றோரின் முகம்

மகிழ்ச்சி ஓடி ஒளிந்திட
மீண்டும் வீட்டையடைந்து விழுகிறேன் படுக்கையில் வழக்கம் போல்

வேகமாக வீசும் காற்று மட்டும் தனிமை தீர்க்க மூடிய என்
வாசல் கதவை தட்டும்!

உனக்காக!

உனக்காக!

அகங்காரத்தை அழித்து என் மனதை
அலங்காரமாக்கினேன் உனக்காக!

சுயமதிப்பு மிக்க என் மனதிலும் ஒரு அரியாசனம்   அங்கு
சுயம்புவாக தோன்றிவிட்ட உனக்காக!

உதிர்ந்தபின் திரும்பப்பெறவே  முடியாத மதிப்புமிக்க
வார்த்தைகள் என்றுமே  உனக்காக!

இழந்து விட்டால்  மீட்கவே முடியாத பொக்கிஷமான
என்  வாழ்வின் ஒவ்வொரு நொடியும் என்றுமே உனக்காக!

இடம் மாறும் இதயம்!

இதிகாசங்களும் சிலாகிக்கும்
இதயங்களின் சங்கமம்!

அண்ணலும் நோக்க அவளும் நோக்க
வண்ண வானவில்லாய் மனம் வளையுது!

புனித நிகழ்வது
மனமும் தன்னால் நெகிழுது!

பேதங்கள் மறந்து
உத்வேகங்கள் பிறந்து...

வார்த்தைகள்   பல கோடி
பார்வையிலேயே கலந்துரையாடி...

கட்டிளங்காளை மெல்லிதயம் சுமக்க மாற்றாக மென்மையான
கன்னியோ வலியவனின் இதயத்தை சுமந்தபின் ...

புதியதாய் பிறந்ததுபோல் இருவருக்குள்ளும்
புதிராக ஒரு தோற்றம்!

நீயும் என் தாய்!

மேய்ச்சலுக்கு நீ  போகும் நேரம் மனமும்
பாய்ச்சலில் உன்னை த் தொடர்ந்து ஓடும்! 

கறந்த உன் மடிப்பாலை  குடிப்பதால்  புதியதாய்
பிறந்த உன் கன்றுபோல் நானும் உன் சேய் தான்!

அம்மா எனக் கூவி நீ  கன்றை  அழைக்கையிலே ஏனோ
சும்மா என் மனம்  செவலை கொள்வதால் நீயும் என் தாய்தான்!

Tuesday, February 7, 2017

கைத்தொழில்!

கைத்தொழில் ஒன்று கற்றிடுவோம்
கவலையை  கவலை கொள்ளவைப்போம்!

கொதிக்கும் உலகில் வாழ்வதற்கு
குளிர் மண்பாண்டங்கள் செய்திடுவோம்! 

மானம் காக்கும் ஆடைகளை தோதாக
நாமே செய்வோம் நெசவு நெய்து!

நெகிழி ப் பையை துரத்திடவே
நல் கூ டை முடைய கற்றிடுவோம்!

ஓவியங்கள் வரைந்திடுவோம்
ஓங்கி நம் கற்பனையை உலகிற்கு  உரைத்திடுவோம்!

பாசம்!

அன்பால் இணைந்த பந்தங்களின்
அடிமனதில் குடிஇருக்கும்!

உரிய நேரத்தில் ஓடிவரும்
உரிமையோடு துன்பமதை  பகிர்ந்துகொள்ளும்!

பகிர்ந்த  இன்பம்   மேலும்  பெருகும்
புதிரான  அமுதசுரபி!

பாசவலையது சிக்கியவர்களுக்கு  என்றும்
பாதுகாப்பாய்   உணரும் நிலையது!

Friday, January 27, 2017

இரக்கமில்லையா...?

ஈடில்லா மனித உயிர் ஏங்குது
ஈகையில்லா இதயங்களால் கண்ணீர் சிந்துது!

கரங்கள் குவித்து வேண்டுது
கழிவிரக்கம் ஏற்படத் தூண்டுது!

ஒருசாண் வயிற்றின் தேவையது
எண்சாண் உடலையும் காக்குமது!

போலியான உலகமோ இது உயிரின் வலி புரியவில்லையா?
காலியான தட்டு நாளையும் பட்டினியெனுதே சிறிதும் இரக்கமில்லையா?

Monday, January 23, 2017

எம்மொழி!


சிவமும் சக்தியும் பெற்ற
தவப்புதல்வன்!

ஆறுமுகம் கொண்டு
அறுபடை வீடும்  கண்டு

சீரிய பெருங்குணங்களும்
வீரமும் ஒருங்கே பெற்ற

தமிழ்க்  கடவுளென
ஒளவையே மொழிந்துவிட்டபின்

தந்தைக்கே  உபதேசித்த பாலகன் காப்பது     
சிந்தை குளிர எம் தாய் எமக்கு  ஊட்டிய

அமுதமொழியையே  என
ஐயமற அறிந்துவிட்ட  கணத்திலே

செருக்கெனக்கும் வாராதோ?

Thursday, January 19, 2017

ஏர்சுமக்கும் காளையே

ஏர்சுமக்கும் காளையே
என்றும் நீ எம் தோழனே!

வீரமும் கற்றோம் உன்னிடமே
விடமாட்டோம் எம் உரிமையை யாரிடமும்

மரபு காக்க கூடுவோம்
மரணம் வரை போராடுவோம்

உழைக்கும் வர்க்கம் ஒன்றுகூடினால்
பிழைக்குமோ எதிர்க்கும் கூட்டம்!

Friday, January 13, 2017

வருக தைமகளே... வழியெல்லாம் பூப்பூக்க!

வருக தைமகளே...
வழியெல்லாம் பூப்பூக்க!

வாழ்வு வளம்பெற்று
வையகம் தழைத்தோங்க!

மண்மாதாவை தன்னுயிராய்
மதித்தொழுகும் விவசாயி உயரவேணும்!

தானியங்கள் விளைவித்து தாய்போல்
தரணியையே வாழவைக்கும்...

பூமித்தாயின் தலைமகனவன் நெஞ்சின்
பாரத்தை போக்கிடம்மா!

மும்மாரி பொழிந்து உழவர்களின்
கண்மாரி துடைத்திடம்மா!

ஏர்பூட்டி உழுபவரின்
ஏக்கத்தை தணித்துவிடு!

தைபிறந்தால் வழிபிறக்கும் உன்
தயவிருந்தால் இது பலிக்கும்!

அறுவடை செய்பவர்கள் காலமெல்லாம்
அறுசுவையும்  சுவைத்திடனும்!

பொங்கலோ பொங்கலென்று
பெருமகிழ்ச்சியில்  பாடிக் கொண்டாடிடனும்!

வருங்கால சந்ததியும் உழவை
வாஞ்சையுடன் கற்றிடனும்!

Tuesday, January 10, 2017

புதுமைப்பெண்கள்!

கற்பனைக்கும் எட்டாத உயரத்தில்
கல்பனா சாவ்லா!

இன்னுயிர் அளித்திட த் தயாராகும்
இராணுவத்திலும் வீரப்பெண்கள்!

அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து
ஆராயத்துடிக்கும் அற்புத பெண்கள்! விதிவிலக்காய்.....

நற்பயிர்களுக்குள் எடுக்க வேண்டிய களைகளாய்
நாகரீக வளர்ச்சியை நல்வழியில் பயன்படுத்தத் தெரியவில்லையென்றால்...
நீங்கள் ஆகமுடியாதென்றுமே  புதுமைப்பெண்களாய்!

Sunday, January 8, 2017

மயங்குகிறேன் மழைக்காதலியே!

மயங்குகிறேன் மழைக்காதலியே!
மீள்வேனோ விடைத்தோணலியே!

கவனத்தை ஈர்க்க நீ ஒரு காணொலியோ?உன்
மனதிற்கேற்றவன் நானில்லையோ?

மழையை நீ அணைப்பது வீணில்லையோ?என
மனதில் பொறாமை மூளுதே அதற்குப் பண்பில்லையோ?

மரம் போலாகிவிட்டேன் படர்ந்திடு கொடி முல்லையே!
மனதைத் திறக்க எனக்கும் வேறு வாய்ப்பில்லையே!

வெள்ளை உள்ளம் கொண்ட பெண் பிள்ளையே!
சள்ளை செய்ய என் மனதில் சிறிதும் வம்பில்லையே!

என்மேல் உனக்கேதும் அன்பில்லையேல்...
நான் வாழ இனி வேறு உலகில்லையே!

எனை மறுத்தாலும் நீ என்றும் மகிழ்ந்திருக்க வேண்டும்!
உன் வாழ்வு நறுமணம் வீசி மலர்ந்திருக்க வேண்டும்!

மறுபிறவியிலும் நான் உன்னை மறவாதிருக்க வேண்டும்!
முடியாதென்றால் நான் மீண்டும் பிறவாதிருக்க வேண்டும்!

Friday, January 6, 2017

ஏனிந்த நாணம்?


ஏனிந்த நாணம்?

கடந்துவரும் பாதைகள்
கடினமாக இருந்தாலும்..

நம்பிக்கை கொண்ட
நல்நங்கையர் தம் வலிகளை மறைத்து..

புன்னகையோடு புவியையே வெல்வதை தானும்
பழக எண்ணி முட்செடியிலும் முகமலரும் ரோஜாவே..

தன்மீது  தீராக்காதல் கொண்ட தலைவன் முன் வெட்கத்துடன்
தலைகுனிந்துவிடும் பெண்மைபோல் உனக்கும் ஏனிந்த நாணம்?

Sunday, January 1, 2017

புத்தாண்டு!



விருந்தோம்பலில் உலகின் சிறப்பு மிக்க
விருதுகளைப்  பெற தகுதி கொண்ட தமிழர்கள் நாங்கள்!

ஆங்கில புத்தாண்டே ஒருபோதும்
அந்நியமாய் உன்னை எண்ணமாட்டோம்!

மார்கழி குளிரிலும்
மாக்கோலமிட்டு அதில்

அழகிய வண்ணப்பொடிகள்  தூவி, வாழ்த்துக்கள் எழுதி
அன்பாய் உன்னை வரவேற்கிறோம்!

மக்களனைவரும்
மனமகிழ்கிறோம் ஒரே நேரத்தில்!

உலகமே இணைகின்றது இன்று புது
உற்சாக சிந்தனையால்!

புதிய உலகத்தில் பிறந்தது போல்
புதிரான அனுபவத்துள்ளல் மனதில்!

எல்லோரும் நேர்மறையான
எண்ணங்கள் கொண்டு ஒரு மனதாய் வேண்டுகிறோம்!

நல்லவை நடக்க வேண்டும்!
நல்லெண்ணங்கள் பலித்திடல்  வேண்டும்!

ஒற்றுமை ஓங்கிடல் வேண்டும்!
உலகில் மனிதநேயம் பெருகிடல் வேண்டும்!