Thursday, September 29, 2016

எனக்கு கிடைத்த புதையலே!!

பற்கள்
பளிச்சிட....

கருமையான கண்களும்
கலந்து சிரித்துப்   போட்டியிட.....

வில்போன்ற புருவம்
வீம்பு கொண்டு வானவில்லாய் மெருகேற்ற....

கன்னம் சிவந்து
கிண்ணத்துசாந்தாகிஇருந்தது!

எடுப்பான நாசி
துடிப்புடன் நிற்க...

இதழ்கள் இணைபிறிந்த சிரிப்பில்  சிவப்பு ரோஜா
இதழ்களாய் குளிரவைக்க....

முகவாய் பளபளப்பில்
முழுமதியே போல் தோன்ற...

அயர்ந்துபோனேன்
அத்தனை அழகுககளுக்கும்
ஆதாரத்தை அறிந்துவிட்டதால்....

"ஆஹா... எவ்வளவு அழகு  ??"
ஆன்லைனில் ஆர்வத்துடன்  சொன்ன அம்மாவிற்கு 
அளவாய் தலையசைத்து  ஆமோதித்தேன் பிரமையில்!

அம்மாவின் புன்னைகையில்
என்மேல் கொண்டிருக்கும் நம்பிக்கை மிளிர்ந்தது!

தங்கையும் சொன்னாள்
தாங்கவொண்ணா சந்தோஷத்தில்
"ஆல்  தி பெஸ்ட் அண்ணா"

புதையலாய் எனக்கு கிடைத்த
பொக்கிஷம்...

கண்களில்
கர்வம் பொங்குகிறது!

கனவிலும்
காணக்கிடைக்காத  அழகு...

 இதோ இன்று
என் கைகளில்...

என்  ஆராய்ச்சி கல்வியின் ஒளிமயமான
எதிர்காலமாக
எனக்கு கிடைத்திருக்கும்...

உலகையே ஆட்டிப்படைக்கப்போகும்
உன்னத அழகுள்ள
பழங்கால பெண்ணின் சிலை! 

Wednesday, September 28, 2016

ருசிகண்ட பூனையானேன்!

சித்திரை மாதம்
கத்திரி வெய்யில்... 

தலையை ஊடுருவி 
தயவின்றி தகித்தது! 

புற்களும் வெப்பத்தால் 
பொசுங்கின பூமியில்! 

தள்ளாத வயதாகிவிட்டாலும் 
தலைப்பாகை கட்டி....

கண்களில் கருப்புக் கண்ணாடியுடன் 
கைகளால் தள்ளுவண்டியில்..... 

இழுத்து வந்தேன் ஜில்ஜில் ஐஸ்க்ரீமை 
கழுத்தில் வழியும் வியர்வையுடன்!

முதுகு முழுதும் ஈரமாகி வழிய.... 
முகத்தை துடைத்து கைத்துணியும் ஈரமாகியது! 

பகல் வெயிலை சிறிதும் சட்டை செய்யாத 
பிள்ளைகள் ஓடி வந்தனர்!

"ஐஸ்க்ரீம் தாத்தா!" என கத்தியவாறே 
ஐந்து ரூபாய் தாள்களுடன்! 

வெயிலிலும் குளிரடித்தது மனதில் 
வெட்ட  வெளி  மலர் தோட்டம் போலானது! 

மகிழ்ச்சியில் பிள்ளைகள் ஓட 
மலர்ந்தது சுய சம்பாத்தியத்தால் என் 
மனதும்! 

சில்லறைகள் 
சுமப்பது  மிகவும் 
சுகமானது!

'வீட்டில் ஓய்வு எடுங்களேன் அப்பா'
மகனின் வார்த்தைகள் மனதை வருடினாலும்.... 

பாலின் ருசிகண்டுவிட்ட பூனைபோல்!
பிறர் மதிப்பில் உயர்ந்து 
போற்றப்பட உதவும்
உழைப்பின் ருசியை 
உணர்ந்துவிட்டபின்...  

வயோதிகத்தில் 
உண்ணும் மருந்துகளைவிட

ஓய்வு கசப்பதென்னவோ 
உண்மைதான்! 

முத்துப்போல் ஜொலித்து 
முதல் மரியாதையை பெற்று தருகின்றன 

உழைப்பவனின் 
வியர்வைத்துளிகள்- என என் சொந்த 

கருத்துக்களில் 
செருக்கேற நடந்தேன்....

ஒருவேளை .........

அடாது ஆடும் கடலும் 
உவர்ப்பது .....
அயராது உழைக்கும் 
அலைகளின் 
வியர்வையாலோ ??!!

என் மனமும் 
எடுத்து கொடுத்தது 
எழுச்சிமிகு எண்ணங்களை..... 

Friday, September 23, 2016

பரிமளித்திட வேண்டாமோ?


பகல் பொழுதில் வயல் வெளியில்
புல் மேய்ந்த கால்நடைகள் தந்தன
பூமிக்கு தன் சாணத்தை எருவாக
புதியதொரு செடி தோன்ற!

அழகான பூக்களும்
அக்கறையாய் தேன் சொரிந்து
உபசரித்தன மகரந்த சேர்க்கைக்கு
உதவிய வண்டுகளை!

பறவைகளும் பழங்களை உண்டு
பின் தன் எச்சத்தால்
அருகில் பரப்புகின்றது
அம்மரத்தின் விதைகளை!

சின்னஞ்சிறு மீன்களும்
சுத்தமாக்குகின்றன
தஞ்சமளித்த நீர் நிலைகளில்
தங்கும்  அழுக்குகளை தின்று!

இயற்கையாய் நிகழும்
இச்செயல்கள் இவ்வுயிரிகளின்
சிறந்த பண்புகளாய் எண்ணி, எண்ணி
சிலாகிக்க வைக்குதே!

பரிணாம வளர்ச்சியில்
பன்மடங்கு உயர்ந்துவிட்ட மனிதனின்
பண்புகளும் சேர்ந்து
பரிமளித்திட வேண்டாமோ??


Thursday, September 22, 2016

வரம் தருவாயா?

புத்தக குவியல்களில்
புதையலாய் கிடைத்த
புது கவிதையின் அழகு!

வீட்டின் வாயிலில்
வாழ்வின் வெற்றியை முன்னமே
கணிக்கும் கண்கவர் வண்ண
கோலங்களின் அழகு!

அலையென அசையும்
கருங்கூந்தலின் அழகு!

பரந்த வானத்தில்
பறவை போல்
பறக்கும் விமானத்தின் அழகு!

தேன் கூட்டை
தட்டி கலைத்தது போல்
பள்ளி முடிந்து
பரவசமாய் ஓடும் பிள்ளைகள் அழகு!

சீட்டுக்கட்டை
அடுக்கியது போல்
பேருந்தில் இடமின்றி
நெருக்கிய பயணத்திலும் அழகு!

அடடா...
வெட்டி எறிந்த
விரலின் நகம் கூட
மூன்றாம் பிறைபோல் அழகோ அழகு!

கம்பன் வீட்டு
கட்டுத்தறி போல் ஆனதை உணர்ந்தேன்  நான்!

 உன் கடைக்கண் பார்வை...
என் எண்ணங்களை
எழிலாக்கி...
என்னையும்
கவியாக்கி...
விந்தைகள் பல புரியும்
வித்தகியானது பெண்ணே!

வரம் தருவாயா??!!
என்றென்றும் சிறந்த கவியரசனாக நான் வாழ!

Wednesday, September 21, 2016

இயற்கையே, உனக்கு ஒரு கேள்வி...

மழைக்கால மேகங்கள்
மயங்கி திரியும் வானில்!

நட்சத்திரங்கள் மறைந்து நின்று
நகராத கருமேகங்களை முறைக்கும்!

அடாது கொட்டும் மழையில்
இடுப்பு வரை தண்ணீரில்...

மெல்ல நகரப்பார்க்கும்
மக்கள் கூட்டம்!

பேருந்தில் சென்றவர்கள்
படகில் வீடு திரும்புகின்றனர்!

இந்த வெள்ளத்திற்கு
என்ன சிக்னல் கொடுப்பது
என்று குழம்பி பழுதாகி
எல்லா திசையிலும்
பச்சை காட்டும்
போக்குவரத்து சிக்னல்!

தொலைபேசி ஆபத்திற்கு உதவாமல்
தொல்லைபேசியாகின்றது!

மின்சாரத்தை மட்டும்
மிகவும் நேசித்து விட்டதால்
சில மணி நேரமாவது  வெளிச்சம் கிடைக்க
சிம்னி விளக்கு கூட இல்லை!

கவிழ்ந்து இருக்கும் இருளில்
கள்வர்களின் நடமாட்டம்
உதவும் நெஞ்சங்களை கூட
உள் தாழ்ப்பாள் போட வைக்கும்!

தற்காலத்தை ஒரே பொழுதில்
கற்காலமாக புரட்டிப்போட்டு...

அனைத்துயிரையும்
ஆட்டி படைக்க வல்ல இயற்கையே!

உன்னை செயற்கை வெல்ல
அமைதியாக அனுமதிக்கிறாய்!

பின்னொருநாள் உரிமையோடு  நீயே
ஈடு செய்து கொள்கிறாய்!

இயற்கையே, உனக்கு ஒரு கேள்வி...

உனக்கு இழைக்கப்பட்ட பிழைகளை
எந்த கணினியில்
நீ பதிந்து வைக்கிறாய்?

Tuesday, September 20, 2016

கடலே உனக்கு பயமோ?

கடலே கடலே...
அழகிய அலையின் ஓசை...

அசையாமல் கட்டிப்போடும்
அலை பாயும் மனதை!!
இசையாக வருடும் இதயத்தை!!

தலை கேசத்தை
கலைத்து விளையாடும்
கடல் காற்று!!

குட்டை நீரில்
குதித்தாடும் குழவி போல்
மேலும் கீழும் அசைந்தாடும் அலையில்
மெல்ல நகரும் கப்பல்!!

கடல் நீரில்
கால் நனைக்கவும்
கலங்கும் அழகிய
குமரி போல்
கரையில் ஒதுங்கி நிற்கும் படகுகள்!!

தன்னுலகம் எனும் இறுமாப்பில்
துள்ளி திரியும் மீன்கள்!!


ஒப்பில்லாத உன் சக்தியை
உலகிற்கு உணர்த்த
உணர்ச்சிவசப்பட்டு
பேரலைகளால் எங்களை மிரட்டி
பரவசப்படுவதை  ஏன் நீ  நிறுத்துவதில்லை ??!!

ஒரு வேளை...

நீயும் நிலம் போல
காகித பத்திரமாகி
பத்திரமாக்கப்பட்டுவிடுவாய்
வங்கி பெட்டகத்தில் என்ற பயமோ??!!




Saturday, September 17, 2016

பொன் மானல்ல பொய் மான்!

பூங்காக்களின் அழகு இன்று...
புது அர்த்தம் பெறுகிறது!

கண்மூடி ரசிக்கிறேன்...
காட்சிப்பிழையோ??!!

இதமான காற்று...
அதனை தென்றல் என்பார்களே??!!

என் நாசிக்குள் நுழைந்து 
இதயம் வரை இனித்தது!

இத்தனை விதமான மலர்கள் 
இவ்வுலகில் இருக்கிறதா??!!

கடவுள் மிகுந்த கலைத்திறனை 
காட்டியுள்ளார் பூக்களில்!

மஞ்சள், ஊதா, கருநீலம் 
கணிக்கவே முடியாத கலவைகளில் பூக்கள்!

பொறாமை பொங்கியது மனதில்...
பூக்களுக்கு அழகிய  பல வண்ணங்களா??!!

என்மீது ஏதோ வந்து விழுந்தது 
"என்ன இது? பறவையின் எச்சமா?"
"என் பொறாமைக்கு கிடைத்த பரிசோ?" கண்திறந்து பார்த்தால்...

நெகிழிப்பை ஈரத்துடன் என் தோளில் 
நச்சென ஒட்டியிருந்தது!

எதிரில்...
உடைந்து போன
ஊஞ்சலில் அமர்ந்து, தண்ணீர் அருந்திவிட்டு...

வீசிய நெகிழிப்பை பற்றிய 
விவரமே அறியாமல் 
வாய்த்துடைத்துக் கொண்டிருந்தது ஒரு குழந்தை!

சுற்றிலும் ஒரு சிறு புல்
செடி கூட இல்லாத வறண்ட பூங்காவின்...

மண்ணின் புழுதியில் குழந்தைகள்  உற்சாகத்தில் 
மகிழ்ந்து திரிந்தனர்

பூந்தடாகத்திற்கு வந்த
பொன்மானை கண்டது போல்!

இக்குழந்தைகள்  உணரவில்லை அவர்களுக்காக 
இவ்வுலகில் நாம் விட்டு வைத்திருப்பது...

பொன் மானல்ல 
பொய் மானென்பதை!!

Friday, September 16, 2016

ஆமையும் முயலும்!

ஆடிப்பாடி வந்த ரயில்
ஆசுவாசப்படுத்தி நின்றது!

அமைதியாக ஆமை போல் உள்ளே சென்று
ஆரவாரக்கூட்டத்தில் ஐக்கியமானேன்!

பள்ளி மாணவர்களின் அரட்டை
பாதி வழி வரை கேட்டது!

பரிட்சை பற்றிய பயமேயின்றி
பகிர்ந்தனர் சந்தோஷங்களை!

விசிறி விற்கும் தாத்தா அனைவருக்கும்
விசிறினார் இலவசமாக!

ஜன்னலில் ஓடிக்கொண்டிருந்த மரங்கள்
ஜனங்களுக்கு வேடிக்கையாக இருந்தது!

பூக்கூடை அம்மாக்கள் ரயிலிலேயே
பூமாலைகளை தொடுத்து நறுமணம் பரப்பினர்!

'கூ' கூவிய ரயில் சத்தம்
குயிலின் குரலாய் ஒலித்தது!

மனமும் மெல்ல தளர்ந்தது
மானசீகமாய் தாளம் போட்டது!

திடுமென போனின் மணியோசை
அனைவரும் திரும்பி எனை பார்க்க - அலுவலக அழைப்பு!

'சாரி சார், கவனிக்கல இப்போ பாக்கறேன்'!
சடுதியில் உரைத்தேன் மன்னிப்பை!

மனமும் முயலென மாறி ஓடியதே
ரயிலின் அழகு மறைந்தும் போனதே!

எல்லா அமைதியும் பறந்தது
எனக்குள் அவசரம்  பிறந்தது!

அழைத்தேன் போனில் உதவிக்கு
அலுவலகத்தின் நண்பர்களை!

ஓரிருவர் உதவினரே  நிறைவாய்
ஒத்தாசை செய்தனரே!

நன்றி நவின்று மகிழ்ந்தேனே
நன்றாய் மீண்டும் அமைதி கொண்டேனே!

மனதில் அமைதி குடி கொள்ள
மீண்டும் ஆமை போல் ஆனேனே!

ரயிலின் அழகும் கூடியதாய்
ரகசியமாய் மனதும் சொன்னதே!

Wednesday, September 14, 2016

என் வீட்டு ரோஜா!

அழகான பூந்தொட்டியில் மண்நிரப்பி
அருமையான வாசம் வீசும்
ரோஜாவின்  விதையை விதைத்தேன்...

சூரியனின் ஒளிக்காக வெளியிலும்
அந்தி சாயும் நேரத்தில் வீட்டிற்குள்ளும்
மாறி மாறி வைத்து காத்தேன்

என்னுயிர் ரோஜா விதை
தன்னுயிர் பெறுவதை...

கண நேரமும் நகராமல்
கண் குளிர கண்டு மகிழ்ந்தேன்!

நன்கு பராமரித்து
நான் வளர்த்த ரோஜா செடியில்
நிறைய பூக்கள் பூத்து
நறுமணம் கமழ்ந்தது என் தோட்டம்!!

யாரும் பறித்து விடாமல்
என்றும் காவல் காத்திருந்தேன்!!

ஆனால்...
ஏனோ ரோஜா வாடியதே
ஒரு நாள் பூக்கள் உதிர்ந்தனவே!!

அடடா, அறிந்தேன் வாழ்க்கையதை!
பிறந்தோம் மண்ணில் நல்மானிடராய்
பிறப்பின் பயனை அடைந்தோமா??

ஒரு நாள் உதிர்வோம் ரோஜா போல்!!
அதற்கு முன் அன்பினால் மற்றவர் மனதை
ஆள்வோம் ராஜா போல்!!




Monday, September 12, 2016

எங்கே போகிறோம் நாம்??

குளிரிந்த காலைப்பொழுது உடலுக்கு குறையில்லாத  வலிமையை தரும்!

கண்களுக்கு இதமானது...
கோயிலில் இறைவனை தரிசிக்க புறப்பட உகந்த நேரம்!

பள்ளியில் நடத்தும் பாடங்களை
பசுமரத்தாணிபோல் பதித்துக்கொள்ள மிகவும் சரியான பொழுது!

எட்டு மணி நேர உறக்கத்திற்கு பின்னே
எட்டிப்பிடிக்கப் போகும் உயரத்திற்கு...

மனதளவில் திட்டம் தீட்ட
மகத்தான நேரம்!

படைப்பாளிகளின் இனிய பாமாலைகளை
பாங்காக அமைக்க அமைதியான நேரம்!

உலகின்...

மதிப்பில்லா பொன்னான நேரம் இதுதான் என்று
மட்டற்ற மகிழ்ச்சியில் - பறவைகள்

தன் மென்மை குரலெடுத்து வீதியெங்கும்
தண்டோரா போட்டுக்கொண்டிருப்பதை...

நின்று ரசிக்கக்கூட சிறிது
நேரமின்றி வேகமான உலக வாழ்க்கையில்
நாம் ஓடிக்கொண்டிருந்தாலும்!

அந்த ஜீவன்கள் என்றுமே பாடுவதை நிறுத்தி விடுவதில்லை!!

Sunday, September 11, 2016

ஆதலால் அன்பை விதைப்போம்!

நாற்பது வயதில்
ருத்ரதாண்டவமாடும் ஹார்மோன்கள்!

அதற்கு மேல்...

கண்களில் விழும் திரையால்
கண்ணாடியின் துணை கூடும்!

சர்க்கரையின் சகவாசம்
சாகாவரத்தையும் போக்கிவிடும்!

உப்போ உவர்ப்போ
உதவாது நாவிற்க்கு!

காது கானாம்ருதத்தையும்
கேட்க விடாது!

அல்செய்மர் வந்தால்
அழகிய பெயரையே மறக்கவைக்கும்!

நடந்தால் முட்டி வலிக்கும்
நடக்க இயலாமல் குட்டித்தீவாகும் வாழ்க்கை!

அப்போது...

அந்த தீவுக்குள்
அற்புதமான ஜீவன்கள்...

சேயாகி விட்ட நம்மை
தாய்ப்போல் அரவணைத்து
தயை கொண்டு காக்க வேண்டும்!

ஆதலால் அன்பை விதைப்போம் இன்றே!!


ஆனந்த வெள்ளமே!

தாயின் கருவறையில்
தனியாக தவித்து...

கவிந்த இருளில் 
கண்களிருந்தும்  காட்சிகளின்றி...

உடலை 'ங' ப்போல் 
வளைத்திருந்து

திரும்பக்கூட இடமின்றி 
குறுகியே அமர்ந்து

முன் ஜென்ம நினைவுகள் 
முள்ளாய்   குத்த 

வெளிவர முடியாத 
வேதனை வாழ்க்கை

போதுமிந்த தண்டனையென்று
பொறுமையிழந்து வெளியேற

வழி தேடியலைந்த காலங்களில்
விடுதலை நேரம் என் இருள்
வாழ்க்கையில் விளக்காய் வந்தது! 

ஆனால்... காட்சிப்பழகா கண்களினால்
இத்தனைக்காலம் தன்னுயிராய் எனைக்காத்து

வெளியுலகம் பழக இன்று
விடுவித்த தாயின் முகம் விளங்காது

கதறியழுதபடி கண்ணீருடன் கேட்டேனே  இனிய
குரலை மட்டும் 'கண்ணே கண்மணியே' என்று

ஆனந்த வெள்ளத்தில் மிதந்தேனே 
அம்மாவின் அழகு முகம் பழகுமுன்னே

உணர்ந்து விட்டேன் நான்  
உன்னதமான தாய் மொழியின் அழகை!


Friday, September 9, 2016

மேகமிட்ட சாபமோ?

சூரியனின் சூடான ஒளிக்கற்றைகள்
சிறிது நேரமாவது பூமியை
அணுகாமல் தன் குளிர் போர்வையால்
அணைத்தது மேகம்!

பூமியும் சற்று குளிர்ந்து நன்றி பாராட்டியது!

பாழாய் போன காற்றிற்கு என்ன பொறாமையோ??!!
பதட்டமாய் வந்து சிதறடித்தது மேகங்களை!

வழி தெரியாது இங்குமங்கும் அலைந்து...
வலிமையுடன் மோதிக்கொண்டன மேகங்கள்!

இடி இடித்து தன்  துயரை சொல்லி...
'ஹோ' வென்று கொட்டி அழுதது மழையாக!

உதவ முடியாத பூமியும்
வெட்கி குனிந்தது தலை!

அழகான மேகங்கள்!
அரை மணியில் கரைந்து....

பூமியிடமே தஞ்சம் அடைந்தன - சில நாட்களில்...
பூத்த பூக்களின் வாசமும்...
புதியதாய் உதித்த ஜீவராசிகளாலும்...

நன்றிக்கடன் உயர்ந்து
நெஞ்சம் பாரமானது பூமிக்கு...

சகல ஜீவராசிகளும்
சமமென்று  உணர்ந்து
சத்துப்பொருள்களை வாரி வழங்கியது - பூமியின்

உயரிய இந்த கோட்பாட்டை
உணராத ஆறறிவு மனிதன்...

தரணியில்...
தான் மட்டும் வாழ நினைத்ததால்
மேகமிட்ட சாபமோ??!!

ஓசோனில்  ஓட்டைகள்!!

Thursday, September 8, 2016

நிலவே, நீ என் செய்வாய்?

பொன் மாலை வேளையில்....
பூமியை குளிர வைக்க வந்த நிலவே!

திரைகடலோடி
திரவியம் தேட சென்ற மகனை....

தொலைபேசியில்
தொடரமுடியவில்லை!

இணையத்தில் இணைய....
இல்லத்தில் வசதி இல்லை!

புறா விடு தூதும் இனி
பலிக்காது என்று....

கற்றை கடிதங்கள் எழுதி
கன்றிப்போய் வலிக்குதென் விரலே!

உன்னாலும் எனக்கு தூது சென்று ....
உதவ முடியாதென வருந்தி ....

பாவமிந்த தாயென்று...
பார்க்க வந்தாயோ??!!

நிலவே, நீ என் செய்வாய்??!!

இருபக்கங்கள்  கொண்ட பூமிக்கு ஒரே நிலவு!
இங்கு இரவானால், அங்கு பகலாமே??!!



Wednesday, September 7, 2016

அரிச்சுவடி மாணவனானேன்!

வானத்தை வசப்படுத்தும்
வல்லமை மிக்க கலைகள்!

ஆகாயத்தை தாண்டியும்
ஆராய வேண்டிய அறிவியல்!

கண்ணுக்கு புலப்படாத
நுண்ணுயிரிகளின் சாம்ராஜ்யம்!

ஆழ் கடலில் புதைந்திருக்கும்
அதிசய உண்மைகள்!

ஆர்வத்துடன் படித்ததில்
ஆயுள் பாதி கழிந்தது!

பட்டங்கள் குவிந்து
பாதி வீடு அடைத்தது!

கையெழுத்துக்காக காத்திருக்கும் கோப்புகள்
கால நேரமின்றி உழைத்ததில்....

பருவம் தாண்டியபின்
திருமணம் முடிந்தது!

குடும்ப வாழ்க்கையில்
அடடே என்ன ஆச்சரியம்??!!

பட்டத்தை கொடுத்துவிட்டு
பரிட்சைகளா??!!

குழம்பி போனேன்
குடும்ப தலைவன் ஆன பிறகு!

ஆறு வயதில்...
'அ'  னா கற்று கொடுத்த தந்தையிடம்
அனுபவ பாடம் கற்க...

மிக்க பணிவோடு
மீண்டும்
அரிச்சுவடி மாணவனானேன்!

Tuesday, September 6, 2016

என் ரகசிய சிநேகிதி!

உலகத்தின் பார்வைகள்
என்னை சோதிக்கும்....

கண்கள் மீன்களென
கட்டுக்கதைகள் கூறும்....

கூந்தல் கார்மேகங்களென
கவிதைகள்  சொல்லும்....

உண்மை சொல்லும் ஒரே
உயிர்த்தோழி நீ தான்....

என் முகம் காட்டும் கண்ணாடியே!
நீயே என் ரகசிய சிநேகிதி!

Monday, September 5, 2016

ஆறாம் அறிவு!

கோலிகுண்டு கண்களும்,
விசிறி போன்ற விரிந்த இமைகளும்,
பிஞ்சு இதழ்களால்
இறுக்க மூடிய வாயுடன்
எனை முறைத்தது 
எதிர் வீட்டுக்குழந்தை!


பிறகு,
அருகில் மெதுவாய் வந்தது,
தயங்கி எனை தொட்டு 
சரேலென கையை பின் இழுத்து,
சந்தேகமாக என் முகம் படித்தது!


மெல்ல என் தலை தடவி,
மிருதுவான கைகளால் முகம் பிடித்து,
மகிழ்ச்சியுடன் என் கன்னத்தில்,
முத்தமிட.....


நான் ஆர்வமேலிட 
நன்றியுடன் சந்தோஷமாக 
குழந்தையின் முகத்தருகே 
குதூகலமாய் சென்ற போது....


"தட் தட்" என் முதுகில் விழுந்த அடியால் 
ஓட்டம் பிடித்தேன் வலியில்.


"யாரம்மா பொறுப்பில்லாம...
நாய் குழந்தைய கடிக்க வருதில்ல? "

கம்பீர குரல் ஒலித்தது தொலைவில்.....

கை வீசம்மா கை வீசு 2.0


கை வீசம்மா கை வீசு!

தாயுடன் காலை வீட்டில்
நலமாய் எழலாம் கை வீசு!


தந்தையுடன் என்றும் ஊரில்
பயமின்றி வாழலாம் கை வீசு!


சகோதரனுடன் நித்தம் பள்ளியில்
பாதுகாப்பாய் படிக்கலாம் கை வீசு!


ஜீ பி எஸ் உடன் என்றென்றும் உலகை
துணிவாய்  வெல்லலாம்  கை வீசு!


Saturday, September 3, 2016

ஜன்னல்கள்

பால் பாக்கெட் விழும் ஓசையில்...
பரவசமான காலையின் விடியல்!

குளியல் ஷவர் நீரின் ஓசையில்...
குதூகலமான மனதின் தொடக்கம்!

காபி  டம்ளர் ஓசையில்...
நாவில் தானே சுரக்கும் எச்சில்!

குக்கர்  விசில் ஓசையில்...
குளிர்ந்தது வயிறு!


மாலை......


பறவைகளின் ஒலியில்...
பரபரப்பு  எழும் மனதில்!

காலிங் பெல் சத்தத்துடன் "அப்பா சாப்பிட்டாரா?"
காதிற்கு மதுரகானம்!


இரவு......


தட்டின் ஓசை...
தாலாட்டாய் கேட்க!

கண் அயர்ந்தேன் நிம்மதியாக....


கண்கள் இல்லாத வாழ்க்கை
கதவுகள் இல்லாத வீடு!

ஓசைகளே என்
ஜன்னல்கள்!

Thursday, September 1, 2016

ஆண்மையையும் போற்றுவோம்!



பதின் பருவத்தில்
பெண்ணிற்கு விழா, சிறுமிக்கு
பெரிய மனுஷி
பட்டம்!


திருமண பந்தத்தில்
தாய்மைக்கு மட்டுமே விழா


கொண்டாட்டங்கள் நிறைந்த
குலமகளுக்கு உதித்த குழந்தை....


ஆணாக இருந்தாலும்
ஆனந்தப்படுவதே ஆதார சக்தியான
பெண்மையின் பெருந்தன்மை


பதின் பருவத்தில், ஆண்
பெற்றோருக்கே தோழனாம், பின்னர்
குடும்பத்தையே
குறையின்றி காக்கும் வீரனாம்!


பெற்ற குழந்தைக்கு பூமியில்
பயமின்றி வாழ போதிக்கும் ஆசானாம்!


ஆண் மகனே
உலகமே
உவந்து போற்றும்
உன்னத சக்தியை  கொண்டவனே!


பெண்மையை போற்றும்
புண்ணிய நாடிது


உன் போன்ற உன்னத சக்தியை
உருவாக்கும் ஆதார சக்தியின் பெருமைகளை


ஐயமின்றி நீ உணர்ந்தால்....

ஆண்மையையும் போற்றுவோம்!!