Tuesday, March 7, 2017

விழித்திடு நீ பிழைத்திடு

இலக்கு அதுவே உன் நோக்கமாக இருக்கட்டும்
விலக்கு இடையே வரும் சலசலப்புக்களை

காத்திரு கொக்குபோல் உருமீன் வரும்வரை  
கனிந்திடும் காலமும் நம்பிக்கையை வளர்த்திடு

விழித்திடு நீ பிழைத்திடு நல்வழியில்
வளர்ந்திடு உன்  வம்சம் விதைத்திடு

காதல் ரோஜாவே!

கண்கட்டு வித்தையோ இது என் மனம்
தறிகெட்டு ஓடுதே அவள்  பின்னால்!

எனக்குப்  பின் பிறந்தவள் தான்  ஆனாலும்  
என்னை ஆட்டிப்  படைக்கின்றாள்! 

இரும்பு மனம் படைத்த என்னை
இருப்பு கொள்ளாமல் தவிக்க வைக்கின்றாள்!

உண்மையறியாமல் எதையுமே ஏற்காத  என்
தனித்தன்மை இழந்து நிற்கின்றேன்!

என் மனதை நானுரைக்க
என்னவளை நாடினால்...

கட்டிளங்காளை என்னை மௌனத்தால்
கட்டிப்போட்டு ஓடுகிறாள்!

ஆராய்ச்சிக்கல்வியில்  மூழ்கி
ஆராய்ந்து படித்துப்  பெற்ற..

பட்டங்கள் என் பெயருக்கு பின்னால் நின்று
திட்டங்கள் போட்டு எனை கேலி பேசுதே!

நங்கையவள் மனம் படிக்க  ஒரு
பல்கலைகழகமும்  உள்ளதோ?

இதயம் என்ன விலை?

அறியாத வயதில் மணமுடித்து
ஆறேழு பிள்ளைகள் பெற்று புகுந்த வீட்டை

ஆயுள் முழுக்க அனுசரித்து
அற்புதமான உறவுகளை உருவாக்கி பிள்ளைகளின்

உடலைப்பேணி வளர்த்து பத்தாதென்று
இரண்டு மூன்று தலைமுறைக்கு உழைத்தின்று

படுக்கையிலேயே   பாசப்  பார்வை வீசும் தாயே  செல்ல
தலைப்பிள்ளைக்கு சொல்வாயா  உன்  இதயத்தின் விலையை?

நீதிக்கு முன்னால்!

நீதிக்கு முன்னால் அனைவரும் சமமென்று
நீதியை முதலில் உலகிற்கு வகுத்துக் கொடுத்து  பின்

தவறு புரிந்தவன் தாம்  பெற்ற பிள்ளையே ஆயினும் தண்டிக்க 
தேர்க்காலில் மகனை இட்டு தாம் வகுத்த நீதிக்கு உயிர் கொடுத்த சோழன்!

தமிழன்னை பாதம் பணிந்து பெற்ற முத்தமிழை
சங்கம் வைத்து வளர்த்து

பாராளும் மன்னன் ஐயம் நீக்க
பாமாலைகள் கோர்த்து மகிழ்ந்து

பாட்டெழுதி தந்தது  வையகமே போற்றி வணங்கும்
பரம்பொருளே  என்றாலும் குற்றமென்று உரைத்து

தமிழின் தரத்திற்கு குறைவராது தடுக்க
தன்னுயிர் தந்து காக்க துணிந்த நக்கீரர்! மாண்புமிக்க

பெரியோர்கள்   துலாக்கோல் போலிருந்து காத்த நீதியை
பேணி நாமும் பாதுகாத்திடுவோம்!

நிலவில்லா மேகம்!

பொறுமையில் சிகரத்தையே எட்டிவிடும் தன்
பெருமையை  மறந்த பெண்மையே..

உற்சாக உலக ஓட்டத்திற்கு என்றுமே
அச்சாணி  நீயடி!

உன் தனிமை துயரம் நீண்டு
வானையும் தாக்கிவிட்டதோ?

கருமேகங்களில் நிலவும் மறைந்துகொண்டு  தன்
கனத்த இதயத்தை சொல்லுதோ ?



இருவரிக்கவிதைகள்


கனவு

ஆழ்மனதின் திருத்தப்பட்ட பதிப்பின் ஒளிபரப்பு
ஆயுளுக்கும் இலவசம் எரிபொருள் தேவையின்மையால்!


காதல்

முன்ஜென்ம பந்தங்களை மட்டும்
மீண்டும் தொடரவைக்கும் அதிசய மந்திரம்!


கிம்பளம்

துரிதகதியில் சாதிக்க நினைக்கும்
திறமையில்லாத மூடர்களின் ஆயுதம்!


கீழ்ச்செயல்

காமவெறி  பிடித்தும் நாட்டிலேயே உலவும்
கூண்டில் அடைக்கவேண்டிய காட்டுவிலங்குகள்!

முகமூடி

நரம்புகளும் எலும்புகளும் ரத்தமும்
நிறைந்த உடல் கொண்டது  உலகின்  உயிரனமே!

மேலுரையாய் தோலிருக்க போதுமென
மௌனமாய் ஏற்றதிந்த விலங்கினமே!

குளிர் வெயில் தாக்காமல் காக்க  நாளும் நமக்கு
குடைபோல் ஒரு உடைதேவைதான் ஆடைகள் என்றுமே! சிலருக்கோ

அகத்தின் அழகை  வெளிக்காட்டிவிடாமல் மறைக்க
அத்தியாவசிய தேவையாகிவிட்டதோ ஒரு முகமூடி?